ப(பா)ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
வளர் பிறையாய்....
பள்ளிப் படிப்பைக்கூட பூர்த்தி செய்ய
இயலாத பட்டுக்கோட்டையார்,
பாட்டுக்கோட்டையாராய் வலம் வர
அவருக்குவாழ்க்கைப்பள்ளி ஏராளமான
கல்வியை வாரி வழங்கியதும் ஒரு காரணம்.
பாவேந்தர் பாரதிதாசனின் பாசறையில் பயின்ற
பட்டுக்கோட்டையார் விவசாயியாக, மாடு மேய்ப்பவராக,
மாட்டு வியாபாரியாக, மாம்பழ வியாபாரியாக,
இட்லி வியாபாரியாக, முறுக்கு வியாபாரியாக,
தேங்காய் வியாபாரியாக, தென்னங்கீற்று வியபாரியாக,
மீன் பிடிக்கும் தொழிலாளியாக, உப்பளத் தொழிலாளியாக,
ஓட்டுநராக, தண்ணீர் வண்டிக்காரராக, அரசியல்வாதியாக,
பாடகனாக, நாடக நடிகராக, நடனக்காரராக... என்று
வாழ்க்கையின் வறுமை களையப் போராடிய கல்யாணம்
1951ல் கவிதை வானில் கவிஞனாக உலாப் புறப்பட்ட
நிலாவானார்.
திரைப்படப் பாடல்களால், வளர் பிறையாய்
வலம் வந்த பட்டுக்கோட்டையார் பெளர்ணமியாய்
பிரகாசித்துத் தேய்பிறை காணாமல் திடீரென
அமாவாசையிருளாக மறைந்து போனார்.
ஆனால் இன்றும் அவர் பாடல்கள் வளர் பிறையாய்..!
கவிஞன் என்பவன்...
சமுதாயத்தின் அவலம், சீர்கேடுகள், அக்கிரமம்
கண்டு பொங்கி எழுந்து தம் எழுத்துத் திறத்தால்
அக்கினியை பிரசவிக்கிறவன்தான் கவிஞனாக
இருக்கமுடியும்; எதுகைமோனையோடு வார்த்தை
களைப் பொறுக்கி எழுதுவதற்குப் பெயர் கவிதையா?
சிவந்து, செங்கதிர் விரித்துச் சூரிய ரதம்
கிளம்புகிறதைவிட நாம் என்ன அழகாக
எழுதிவிடப் போகிறோம்?
நீல வானக் கம்பளத்தில் இரைந்து கிடக்கும்
வைர நட்சத்திரங்களிடையே முகிழ்த்துப்
பவனி வரும் பால்நிலவைவிடவா அழகான கவிதை வடித்துவிடப்போகிறோம்?
எங்கோ ஏற்பட்ட இழப்புகளுக்கும், யாராருக்கோ
நடந்த தீங்குகளுக்கும், அவற்றைத் தனக்கே
ஏற்பட்ட பாதிப்பாகக் கருதி அதற்கு விடை
தேடுகிற பாங்கினைப் பெறுபவனே கவிஞன்.
வலுவிழந்த வார்த்தைகளுக்குள் தன்னைக்
சிறைப்படுத்திக்கொள்ளாமல், சமுதாயக்
களைகளை வெட்டிச் சாய்க்கிற எழுத்து
வாளாய் மிளிர்கிறவனே கவிஞன்!
இப்படிப்பட்ட அழுத்தமான அடயாளங்களைக்
கொண்டவன்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இது காலத்தால் கரைந்து போகாத உண்மை.
-ஆல்பர்ட்.
No comments:
Post a Comment