Wednesday, October 24, 2007

கல்யாணசுந்தரம் - 3

ப(பா)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!

ஆயுதம்...

பட்டுக்கோட்டையார், தமிழ்தாயின் இரத்த
நாளங்களில் இன்றும் உயிர்த் துடிப்பாய்
உலவிக் கொண்டிருக்கிற உன்னதக் கவிஞன்.

பட்டிதொட்டியெல்லாம் அவனது அடிமனத்து
நாதங்களை அசை போட்டு மனம் குதூகலித்துக்
கும்மாளமிட வைக்கிற ஒப்பற்ற கவிஞன்.

கிராமப்புறங்களில் ஒரு சடங்கு, கல்யாணம்
காச்சின்னா மைக்செட் இல்லாம எந்த விசேசமும்
நடக்காது.கிராமத்து மண்வாசணை மணக்கும்
அவன் பாடல்கள், "நாள் முழுக்க வயலில் குனிந்து
வேலைசெய்து கூன்விழுந்த களைத்துப்போன
இதயங்களைக்கூட நிமிர்ந்து உட்கார்ந்து ரசிக்கச்
செய்யும் ஆற்றல் படைத்தது மக்கள் கவிஞரின்
பாடல்வரிகள்!

அவனுடைய கவிதைகளுக்கு ஆன்றோரின்
விளக்கவுரையோ, தெளிவுரையோ தேவையில்லை.
அதனால்தான் காலத்தை வென்ற அவனது
கவிதையை கிராமத்துச் சாதாரணனும்
அசாதாரணமாக வாய்ப்பாட்டாய் பாடிப்
பவனி வருகிறான்.

" நெல்லுக்குள் அரிசி" இருக்கிறது பரம
இரகசியமா?
ஆனாலும் அரிசி தானிருக்கிறது என்று அடித்துச்
சொல்ல நம்மவர்களுக்கு தேவைப்பட்ட
காலப்பெட்டகம் கண்டெடுத்த கோமேதகம் அவன்!

அவனுடைய கவிதை வரிகள் ஆயிரமாயிரம்
நூற்றாண்டுகள் அழிந்து தோன்றினாலும் முலாம்
பூசப்படாத உண்மைகளாய் உலா வரத் தகுதியானது!

காரல் மார்க்சும், ஏங்கெல்சும் உலகுக்கு அளித்த
பொதுவுடமைப் பேரறிக்கையில்,
" உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; நீங்கள்
இழக்கவேண்டியது சங்கிலிகளைத் தவிர வேறொன்றும்
இல்லை... " என்று சொல்லப்பட்ட தத்துவம் மக்கள்கவிஞனின்,

" காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்குக் கையும்
காலும்தானே மிச்சம் " என்கிற ஈரடி, படிக்காத
பாமரனுக்கும் புரிந்து போகிற எளிய, ஆனாலும்
வைர வரிகளில்லையா?

வினாவும் விடையுமாக கவிஞர் நிகழ்த்தும்
சொல்லாட்டங்களில் சொக்கிப் போக வைக்கிற
சொகம் இருக்கிறதே... அந்த வார்த்தைகளின்
வசீகரிப்பிற்குள் மக்கள் சொக்குப் பொடி
போட்டதுபோல சொக்கித்தான் போனார்கள்.

எதார்த்தமான வார்த்தைகள் என்றாலும் சீரிய
சிந்தனைக்குச் சொந்தக்காரர் என்பதை
சொல்லாமல் சொல்லும் வரிகள் இவைகள்:-

" உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிற ஏவு
கணையோ?! அடியோடு நாசம் செய்கிற
அணுகுண்டோ?

அற்புதமாக விடை பகருகிறார்.
"நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின்
நாக்குதான்... அது! என்னே ஒரு ஆழ்ந்த கருத்து!

-ஆல்ப‌ர்ட்.

No comments: