Wednesday, October 24, 2007

கல்யாணசுந்தரம் - 5

<>பா(ப)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

உழவனும் ஊராள்பவனும்...

" எழுதிப் படிச்சு அறியாதவன் தான் உழுது
உழைச்சு சோறு போடுறான்!
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுறான்.

அவன் சோறு போடுறான்!
இவன் கூறு போடுறான்!.." நிதர்சனத்தை
எளிமையாக இதைவிட எழுதுகிற நேர்த்தி
இவனுக்கு மட்டுமே சாத்தியப்படிருந்தது.
நிலப் பிரபுத்துவ பூமியான தஞ்சைத்
தரணியைச் சேர்ந்தவர் கவிஞர் என்பதால்,
மிட்டா மிராசுகளின் கோரப்பிடியிலிருந்து
விவசாயிகளை மீட்டெடுக்கவே விவசாய
சங்கத்துடனும் பொதுவுடைமைக்
கட்சியுடனும் தன்னைப் பிணைத்துக்
கொண்டவர் கவிஞர்.

உழவனின் உள்ளக் கிடக்கை எப்படியிருக்கும்
என்பதை " ஏரோட்டும் ஏழை இதயங்
குமுறினால் போராட்டமே எழுமே.." என
முரசறைகிறார்.

" தேனாறு பாய்கிறது செங்கதிர் சாயுது,
ஆனாலும் மக்கள் வயிறு காயுது..." - என்ற
பாடலையும் எழுதி 1954ல் திண்டுக்கல் காந்தி
மைதனத்தில் நடைபெற்ற "கண்ணின் மணிகள்"
நாடகத்திலும் நடித்து வாழ்வில் வறுமையும்
துன்பமும் தந்த அனுபவங்களைச் சொல்லி
உழவனின் நண்பன் என்பதை நிரூபித்தார்.

இப்படித்தான் வாழவேண்டும் என்கிற
இலக்கின்றி எப்படியும் வாழமுடியும் என்கிற
வக்கிர எண்ணம் கொண்டோரை,

" குறுக்குவழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா -இது
கொள்ளையடிப்பதில் வல்லமை
காட்டும் திருட்டு உலகமடா -இதயம்
திருந்த மருந்து சொல்லடா " என்கிறார்.

நேர் வழியின்றி, குறுக்குவழியால் பணம்,
பதவி, சுகம் தேடுகிறார்கள்;
பதவி வந்த பிறகும், தங்கள் பதவியைக்
கொண்டு உலகிற்கு நன்மை செய்யாமல்
கொள்ளையடிப்பதில் தான் தங்கள்
திறமையைக் காட்டுகின்றனர்.
இப்படிபட்ட இதயம் திருந்த மருந்து
வேண்டும் என்கிறார்.

" திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது - அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்கமுடியாது. " -
அப்பட்டமாகச் சொல்லுகிறார் கவிஞர்.

சாதாரணமாக வீடு புகுந்து களவு செய்ப
வனுக்கும் பொருந்தும்; நாட்டையே சுரண்டிக்
கொழுக்கும் கூட்டத்துக்கும் பொருந்தும்.

இக் கவிதை, எவ்வளவோ சட்டங்கள்
திருட்டைத் தடுக்க இருந்தாலும், தனி
மனிதமாற்றமே சிறந்த விளைவை ஏற்படுத்த
முடியும் என்கிறார். பொதுவுடைமைச்
சிந்தனைப்பூக்களுக்குச் சொந்தக்காரரான
கவிஞர் மனதில்தான் எத்தனை விதமான
சிந்திப்புகள்!

" தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு
செய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!..." என்கிறார்.

எல்லாரும் அதது, அது பாட்டுக்கு நடக்கும்
என்று எண்ணிவிடக்கூடாது.

ஒவ்வொரு
மனிதனும் சிந்திக்க வேண்டிய சித்தாந்தக்
கருத்தல்லவா?

அது மட்டுமா!

" இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்
போனால் பதுக்கிறவேலையும் இருக்காது,
ஒதுக்கிற வேலையும் இருக்காது..."
- அரசோச்சுகிறவர்களுக்கு அச்சாரமாக இருக்க
வேண்டிய அப்பழுக்கற்ற சிந்தனையை
அசாதாரணமாகச் சொல்லுகிற கவிஞரின்
ஆற்றல் கண்டு எவர் வியக்காமலிருக்கமுடியும்?

-ஆல்ப‌ர்ட்.

No comments: