Wednesday, October 24, 2007

கல்யாணசுந்தரம் - 7


<>பா(ப)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

மனோன்மணியம் சுந்தரப் பிள்ளையின்
எண்ண அதிர்வுகளை,

" நாங்க பொறந்த தமிழ்நாடு - இது
நான்கு மொழிகளின்தாய் வீடு!
ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
தாங்கிவளரும் திரு நாடு! என்று கர்வமாகச் சொல்லி
பெருமை கொள்ளுகிறார்.

" ஓரோண் ஒண்ணு - உள்ள தெய்வம் ஒன்று;
ஈரோன் ரெண்டு - ஆண் பெண் ஜாதி ரெண்டு;
மூவொண் மூனு -முத்தமிழ் மூனு,
நாலொண் நாலு - நன்னிலம் நாலு..." என்கிற
எளிய பாலர் பாடத்தை பாட்டாகத் தந்த

சிவப்புச் சூரியன், பட்டுக்கோட்டையார்.

" எந்த நாடும் இதற்கீடில்லை என்றே என்
சொந்த நாட்டைச் சொர்க்கமாக்கிடுவேன்" என்று
தன்னம்பிக்கையோடு சூளுரைக்கிறார். "

பெற்ற தாயின் புகழும், பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேண்டும்! " என்று
தேசப்பற்றைத் தெளிக்கிறார்.

இளைய சமுதாயத்துக்கு...

இளைய சமுதாயம்தான் நாளைய
வரலாறு சமைக்கப்போகிற நல்ல
உள்ளங்கள் என்பதை உணர்ந்த மக்கள் கவிஞர்,

" ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி..." என்று
சமூகத்துக்கு தூண்டில் போடுகிறார்.

நாளைய வரலாற்றுக்கு வித்தாக
வளருகிற சின்னப்பையனுக்குச்
சேதி சொல்லுகிறார்,

" சின்னப்பயலே, சின்னப்பயலே
சேதிகேளடா..." என்று சொல்லும்போது கூட,
அவன் வாழ்கிற ஊர் என்கிற சின்னச்
சிமிழுக்குள் அடைத்துவிடாமல்,

" மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி வளர்ந்து வரும்
உலகத்துக்கே - நீ வலது கையடா... புரிந்து
நடந்துகொள்ளடா - தம்பி தெரிந்து
நடந்துகொள்ளடா" என்று பரந்து விரிந்த
உலகை நோக்கிச் சிறகு விரிக்கச் சொல்லுகிறார்.

இப்படிப்பட்ட பொருள் மிக்க பாடல்களால்தான்
மக்களைக் கவர முடிந்து மக்கள்திலகமானார்
எம்ஜிஆர் அவர்கள்!

எப்படியும் வாழ்க்கையை வாழலாம்
என்றில்லாமல் இப்படித்தான் வாழ
வேண்டும் என்ற வரையறை வகுத்துக்
கொடுக்கிறார்.

" வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே
போதுமடா..! " என்கிறார்.

தவறு நடப்பது வாழ்க்கையில் சகஜம். அதைத்
திருத்திட வேணும்..." என கவிஞர் வெகு
நேர்த்தியாகச் சொல்லுகிறார்.

"சிந்திச்சுப் பாத்து செய்கையை மாத்து - தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ தெரிஞ்சும்
தெரியாம நடந்திருந்தா - அது திரும்பவும்
வராமப் பாத்துக்கோ..."

- மக்கள் மனங்களைக் கவர்ந்த மந்திர வரிகள்!

பட்டுக்கோட்டை இட்டுக்கட்டிய பாடல்கள்
பலவால் நாடோடிமன்னன் நாட்டைப்
பிடிக்கும் மன்னனாக‌ மாற எம்ஜியாருக்கு
ஏதுவாயிற்று என்பது காலம்
காயப்படுத்தாத உண்மைகள்!

-ஆல்ப‌ர்ட்.

No comments: