Wednesday, October 24, 2007

கல்யாணசுந்தரம் - 6


<>ப(பா)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

"திருட்டு நரிகள் குழி பறிக்குது....."

அல்லும் பகலும், மழையோ வெய்யிலோ,
நனைந்தும் கருகியும் நிலவெளியில்
பாடுபடுகிற விவசாயியும், விவசாயினியும்
தாங்கள் படும் இன்னல்களை மட்டுமே
சொல்லாமல் நம்பிக்கையையும் விதைப்பதாக
அமைத்துக் கவியாத்தவர் பட்டுக்கோட்டையார்!

" காடு வெளையட்டும் பெண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே " - என்று ஆறுதலாகச்
சொல்லி நம்பிக்கைப் பூக்களைத் தூவுகிற
கவிஞர்,
எதிர்காலத்தை, " பட்ட துயரினி மாறும் - ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம் " - என்கிறார்.

அதே நேரத்தில் " கஞ்சி கஞ்சி என்றால் பானை
நிறையாது, சிந்தித்து முன்னேற வேண்டுமடி" என்கிற
சித்தாந்தச் சிதறலை முன்னேற்றத்துக்கான முதல்
அடியாக முன் வைக்கிறார்.

ஓதுவார் தொழுவாரெல்லாம், உழுவார் தலைக்
கடையிலே, உலகம் செழிபதெல்லாம், ஏர்நடக்கும்
நடையிலே, ஆதி மகள் அவ்வை சொல்லை
அலசிப்பார்த்தா நெஞ்சிலே நீதியென்ற நெல்விளையும், நெருஞ்சிபடர்ந்ததரிசிலே!
என்கிற வரிகளில் அய்யன் திருவள்ளுவனின்
உழவு அதிகாரமும் அவ்வைப்பிராட்டியின்
ஆற்றங்கரையின் மரமும் ஒருங்கே சேர்ந்த
எளிமைக் கவிதையாக வடித்து வழங்கியிருக்கிறார்
மக்கள் கவிஞர்!

" சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி..." - என்கிற
வரிகளில் பொதிந்து கிடக்கும் பொருள் தான்
எவ்வளவு?
இந்த இரு வாக்கியங்கள் உழவுத் தொழிலின்
சூட்சுமத்தையே அடக்கி வாசிக்கும் வரிகளல்லவா?

மிகச் சாதாரணப் பாடலிலும் சமுதாய நோக்கு

மிளிரும். இலை மறை காயாக முகிழ்க்கும் படிக்காத
மேதை பட்டுக் கோட்டையின் பாடல்களில் பொருட்
செறிவும், சோடை போகாச்சொற்கட்டும் மிளிரும்.

தேமதுரத் தமிழில், படித்தவரும், பாமரரும் போற்றும்
வண்ணம் எழுதிக்குவித்தவர். இலக்கியம் பயிலாதவ
ரெனினும் சங்கத் தமிழ் சமைத்த பேராளர்களோடு
ஊறித் திளைத்த உன்னதக் கவிஞர்.

வள்ளுவம்...

வள்ளுவர் வகுத்த வழியில் நடை போட
சமூகத்துக்கு தனது கவிதையை தூது விட்ட
தென்றல் பட்டுக்கோட்டையார். " வள்ளுவப்
பெருமான் சொல்லிய வழியில் வாழ்வது
அறிவுடைமை..." என்றும் " நாணம் உண்டு
வீரம் உண்டு; நல்ல குறள் பாடல் உண்டு..." என்றும்

" வள்ளுவன் வழியிலே - இனி வாழ்க்கை ரதம்
செல்லுமே..." என்றும் " வள்ளுவரின் வழி வந்த
பெரும் பணி வாழ்வில் நன்மையுண்டாக்கும்,
தன் மானம் காக்கும்..." என்றும் ஆங்காங்கே
வள்ளுவத்தை வழிகாட்டியாக, கவிஞர்
கவிதாலங்காரம் செய்திருப்பதிலிருந்தே அவர்
வள்ளுவப் பெருமகனாரின் மீது கொண்டிருந்த
பற்றின் ஆழம் அறியமுடிகிறது.

பொறந்த மண்ணு...

"சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி" என்ற பாடலில்
நாட்டு விடுதலைக்காக அயராது உழைத்த
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ்,
செக்கிழுத்தசெம்மல் வ.உ.சி., கொடிகாத்த
குமரன், தில்லையாடி வள்ளியம்மை, பாரதியார்
என்ற விடுதலை வீரர்களைப் பாடிய கவிஞர்,
பெற்ற சுதந்திரம் பேணிக்காக்கப்படாமல்
பேதலிக்கிற நிலை கண்டு மனங் குமுறுகிறார்.

" நீங்களெல்லாம் இன்றிருந்தால் தியாக வடுக்கள்
எல்லாம் கண்களாக்கித் தேசத்தை நனைத்திருப்பீர்!
பெரு வெயிலால் வண்டல் நிலம் வெடிப்பதுபோல்,
பிளவுபட்டுச் சுயநலத்தால் வருமான வேட்கையிலே
புகுவதன்றி மனதிலேதும் விசாலமுண்டா? " - என்று
தனது வேதனையை வெளிக்கொட்டுகிறார் கவிஞர்.

(இந்த இடத்தில் ஒரு பட்டுக்கோட்டையார் மட்டும்
இன்றிருந்தால் காசுக்காக திரைப்படப்பாடல்களை
அநியாயமாக ஆங்கிலக் கலப்பு செய்து கசாப்புக்கடை
நடத்தும் வாணிபக் கவிஞர்களை விரட்டியடித்திருப்பாரோ என்றெண்ணத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. )

மேலும், " எங்கே உண்மை என் நாடே?
ஏனோ மெளனம் சொல் நாடே?
மேலான செல்வம் வீணாகலாமா? - என்று
உளம் பதறிக் கேட்கிறார்.

" இது வீரர் பொறந்த மண்ணு, இதில் நாமெல்
லோரும் ஒன்று! - என்று மனித நேய ஒற்றுமைக்குக்
குரல் கொடுத்ததோடு, "
அன்பிருக்குது, அறிவிருக்குது பாரிலே,
எதை அழிக்க எண்ணித்
திருட்டு நரிகள் குழி பறிக்குது வேரிலே?" என்று
எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.

-ஆல்ப‌ர்ட்.

No comments: